காலைப் போதின் உன் இன்முகம் ஒன்று போதும்
அந்நாளை நம்பிக்கையோடு நான் கடப்பதற்கு
நாற்காலி மேசை சகிதம்
கோப்புகளில் ஒப்பமிடும்
அரசு நிர்வாகப் பணியோ
நாலுகால் பாய்ச்சலில்
மாத இலக்கை முடிக்க
நாயாகவலையும் தனியார் நிறுவனப் பணியோ
வாய்க்காமல் நான் வணிகத்தை நோக்கி வந்தவனில்லை
வணிகமே என் புத்தியாகவும்
எனை வளர்க்கும் சக்தியாகவும்
என் வாழ்வின் தொலைநோக்கு யுக்தியாகவும்
என் நாடி நரம்புகளிலும்
இண்டு இடுக்குகளிலும்
உனைப் போலவே
நிலை கொண்டுள்ள
என் வாழ்வாசையின்
ஆழ விழுதுகள்
வணிகப் பாதையில்
புடம் போட்டு தடம் பதித்த
ஆளுமைகளின் தழும்புகளை
தினம்தினம் தேடிப் பார்க்கிறேன்.
உறவோடு வாங்கிய காயங்களின்
ஆறா வடுக்களை
அவ்வப்போது தடவிப் பார்க்கிறேன்.
அன்பின் வழிப்பட்ட பாதையில்
எதிர்ப்படும் இன்னல்கள்
மரமுதிர்க்கும் இலை போன்று
இயற்கையாய் உதிரும்.
வெறுப்பின்பாற்பட்ட பாதையில்
நகைப்புக்கான பகடியும்கூட
நன்கு திட்டமிடப்பட்ட
நயவஞ்சக சதியாகப் படும்.
நான் கற்பின் கரைகண்டவனல்ல
ஆனால்
கற்பின் கரை கடக்காதவன்.
நான் சொல்லில் சுகம் காட்டுபவனல்ல
ஆனால்
சொல்லிய சொல்லுக்காக
என் உயிரையும் விலையாய்க் கொடுப்பவன்.
-மாணிக்க முனிராஜ்
No comments:
Post a Comment