Sunday, 6 June 2021

என் உயிரே விலை

காலைப் போதின் உன் இன்முகம் ஒன்று போதும் 

அந்நாளை நம்பிக்கையோடு நான் கடப்பதற்கு


நாற்காலி மேசை சகிதம் 

கோப்புகளில் ஒப்பமிடும் 

அரசு நிர்வாகப் பணியோ

நாலுகால் பாய்ச்சலில் 

மாத இலக்கை முடிக்க 

நாயாகவலையும் தனியார் நிறுவனப் பணியோ

வாய்க்காமல் நான் வணிகத்தை நோக்கி வந்தவனில்லை


வணிகமே என் புத்தியாகவும் 

எனை வளர்க்கும் சக்தியாகவும்

என் வாழ்வின் தொலைநோக்கு யுக்தியாகவும் 

என் நாடி நரம்புகளிலும் 

இண்டு இடுக்குகளிலும் 

உனைப் போலவே

நிலை கொண்டுள்ள

என் வாழ்வாசையின் 

ஆழ விழுதுகள்


வணிகப் பாதையில் 

புடம் போட்டு தடம் பதித்த 

ஆளுமைகளின் தழும்புகளை 

தினம்தினம் தேடிப் பார்க்கிறேன்.

உறவோடு வாங்கிய காயங்களின்

ஆறா வடுக்களை 

அவ்வப்போது தடவிப் பார்க்கிறேன்.


அன்பின் வழிப்பட்ட பாதையில்

எதிர்ப்படும் இன்னல்கள்

மரமுதிர்க்கும் இலை போன்று 

இயற்கையாய் உதிரும்.

வெறுப்பின்பாற்பட்ட பாதையில்

நகைப்புக்கான பகடியும்கூட

நன்கு திட்டமிடப்பட்ட

நயவஞ்சக சதியாகப் படும்.


நான் கற்பின் கரைகண்டவனல்ல

ஆனால்

கற்பின் கரை கடக்காதவன்.

நான் சொல்லில் சுகம் காட்டுபவனல்ல

ஆனால்

சொல்லிய சொல்லுக்காக 

என் உயிரையும் விலையாய்க் கொடுப்பவன்.


-மாணிக்க முனிராஜ்


No comments:

Post a Comment

பண் பாடு

பயணங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.  பக்குவங்கள் தான் மனிதனைப் பண்படுத்துகின்றன.  பண்பாடு தான் மனிதனைப்  பண் பாடவும் வைக்கிறது.