Wednesday, 13 January 2021

மார்க்கெட்டிங் மாயவலை - புத்தக மதிப்புரை

 

புத்தகத்தின் பெயர்: மார்க்கெட்டிங் மாயவலை

ஆசிரியர்: கார்த்திகேயன்

பதிப்பகம்: ரஞ்சிதா, 43, அங்குசாமி தெரு, மகாநகர், வண்டியூர், மதுரை - 20, 9036782332

பக்கங்கள்: 68

விலை: ₹120

"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" என்கிற இயற்பியல் நியதிக்கு ஏற்ப மார்க்கெட்டிங் மாயாஜாலங்களால் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் கைப்பற்றும் கார்ப்பரேட் மயப்படுத்தப்பட்ட அரசியல் உலகை எதிர்கொள்ள ஒரே வழி, அதே மார்க்கெட்டிங் யுக்திகளைக் கைக்கொள்வது ஒன்றுதான் என்பதை அனைவருக்கும் குறிப்பாக இன்றைய அரசியல் பயில்வோர்க்கு தெளிவுற விளக்குகிறது இந்த நூல்.


தொடக்கத்தில் ஏதோ ஆங்கிலப்படத்தின் டப்பிங் போல ஒரு உணர்வு ஏற்பட்டாலும் கட்டுரையின் அடுத்தடுத்த கட்டங்களில் நிகழ் அரசியல் போக்கினை விவரிக்கும் யதார்த்தமான அனுகுமுறையால் மாயவலையில் வாசகர்களையும் சிக்கவைக்கிறார் நூலாசிரியர் கார்த்திகேயன்.


ஒரு நாட்டிலிருந்து பிறநாடுகளுக்குச் சென்று தங்கள் நாட்டின் பெருமைகளைப் பேசிய தூதுவர்களும், மதங்களை உருவாக்கிய மூலவர்களும் அவர்களது சீடர்களும்தான் உலகின் முதல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள் என்கிறார்.


"மன்னர்களின் விருப்பமான மதமாக வேதிய மதம் இருந்தது. இதற்கு மூலவர்கள் இல்லை. இதை உருவாக்கிய தனி நபர் என்று எவரும் இல்லை. ஆனால் அந்த மதத்திற்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை உருவாக்கிய கூட்டம் மட்டுமே அனைத்து இடங்களிலும் அதிகார மையமாக செயல்பட வேண்டும் என்பது"


"அவர்கள் பரவிய அனைத்து இடங்களிலும் உள்ள சிறுதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு புகழ் வாய்ந்த அரசர்கள் என்று அனைத்தையும் உள்வாங்கி கதைகள் புனைந்து தனிநபர்களை கடவுளாகவும் வழிபாட்டு முறைகளை தங்கள் மதத்தின் ஒரு அங்கமாகவும் நிலைநாட்டினர்."


"இந்த மார்க்கெட்டிங் வெற்றிக்காக அவர்கள் உருவாக்கிய கதைகள் எத்தனை புராணங்கள் எத்தனை இதிகாசங்கள் எத்தனை .... உளவியல் உத்திகள் எத்தனை என்று அறியும்போது மிகப்பெரிய மலைப்பு ஏற்படுகிறது" என்று பிராமணியத்தின் தந்திரமான மார்க்கெட்டிங் உத்திகளை சிறப்பாக விளக்குகிறார் ஆசிரியர்.


ஷாட்கன் அப்ரோச், கொரில்லா மார்க்கெட்டிங், அஃபிலியேட் மார்க்கெட்டிங், இன்ஃபுளூயன்ஸ் மார்க்கெட்டிங் என்று எத்தனையோ வகை மார்க்கெட்டிங் இருந்தாலும் "கூட்டைவிட குருவி தான் முக்கியம்" என்று கன்டென்ட்டின் முக்கியத்துவத்தைத் தெளிவாக்குகிறார். 


"..... எப்பப்பாரு பிரச்சாரம் செய்யக் கூடாது. விவாதம் தான் செய்ய வேண்டும். சண்டை செய்யவேண்டும். சேட்டைகள் செய்ய வேண்டும். மக்களோட பல்ஸ் உணர்ந்தவராகப் பேச வேண்டும். இது உருவாக்கும் சாவோஸ் மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும். நேரடி பிரச்சாரம் இறுதியில் தான் செய்ய வேண்டும்" என்று இன்பௌண்ட் மார்க்கெட்டிங்கைவிட அவுட்பௌண்ட் மார்க்கெட்டிங்கே வீரியம் மிக்கது என்று விளக்குகிறார்.


தேர்தல் வெற்றிக்கு நம் அணி உருவாக்கும் கூட்டணியை விட எதிரி உருவாக்க முயலும் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் குறித்து உளவியல் கூட்டணி என்ற கட்டுரையில் விளக்குகிறார். மேலும் உளவியல் பகுப்பாய்வு அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.


"நம்பகத்தன்மை, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், 

பொய் பேசாமல் இருத்தல், ஒப்புவித்தலாக இல்லாமல் இயல்பாகப் பேசுவது‍, அழுத்தம் திருத்தமாக 2, 3 பாய்ண்ட்களைப் பேசுவது, தவறுகளை ஒப்புக் கொள்வது" உள்ளிட்ட

மனதைத் தூண்டும் பேச்சு வன்மைக்குரிய 10 கட்டளைகளைப் பரிந்துரைக்கிறார்.  


மொத்தத்தில் ஏவாளை ஃபர்பிடண்ட் ட்ரீயின் ஆப்பிள் பழத்தைத் திண்ண வைத்த செற்பெண்ட்டும் (பாம்பும்), ஹாலோ எஃபக்ட் தந்திரத்தால் மோடி, டிரம்ப் வகையறாக்களை தேசத்தின் உச்சத்தில் அமர்த்திய ஊடகங்களும் பின்பற்றிய சித்து வேலை ஒன்று தான். அது தான் மார்க்கெட்டிங்.


இந்த மார்க்கெட்டிங் கலையை சமத்துவத்தையும் சமூகநீதியையும் காக்க களத்தில் நிற்கும் தம்பிகளும், தொண்டர்களும், தோழர்களும், அண்ணன்களும், தலைவர்களும் அறிந்து புரிந்து செயலாற்ற பயன்படுத்திக் கொள்ள இப்புத்தகம் பயன்படும்.


- மாணிக்க முனிராஜ்

02:07, 12.1.2021

No comments:

Post a Comment

அறுபடாத தொடர் சங்கிலி

மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது  வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...