Tuesday, 19 September 2017


கிரீமிலேயர் எனும் சமூகநீதி


இந்திய அரசியல் என்பது சாதிய பொருளாதார ஆதிக்க உணர்வுசார் அரசியல்.

சாதியப் பார்வைக்கு சாதியம் குறித்த நீண்ட நெடிய வரலாற்றின் வடு எத்தகையது என்ற ஆழமான புரிதல் தேவை. இடஒதுக்கீடு என்பது மறுபங்கீடு என்று அப்போதுதான் புரியும்.

இன்றைக்கு நடைபெற்று வரும் நீட் போராட்டங்கள் சமூகநீதி தொடர்பான மேலதிகமான விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. இந்தியாவின் பன்மைத்துவ பாதுகாப்பு என்பதுதான் தேசத்தின் உயிர்நாடி. சமூகநீதியைக் கட்டிக் காக்காமல் பன்மைத்துவத்தை ஒருகாலும் பாதுகாக்க முடியாது.

இந்தியாவின் வெறெந்த மாநிலத்திலும் பின்பற்றாத அளவிற்கு அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைபிடிக்கும் நமது மாநிலத்தின் மீது அதைப் பொறுக்கமாட்டாத உயர்சாதி அரசியலின் வன்ம வடிவங்களில் ஒருமுகம்தான் நீட்.

செழுமையான இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு என்பதும் பாகுபாடுதான் என்றாலும் அதை நேர்மறை பாகுபாடாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்திய சமூக வரலாற்றை ஆழமாகப் புரிந்துகொள்வதிலிருந்து பெறமுடியும்.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினர் பாதிப்படைவதாகவும், திறமைக்கு இடஒதுக்கீட்டினால் பங்கம் வந்துவிட்டதாகவும் கூப்பாடு போடுவதெல்லாமே இடஒதுக்கீட்டை சீர்குலைப்பதற்கான சதிகளில் ஒரு பகுதியே.

தற்போது பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டிற்கு மாற்றாக சமூக நீதியைக் காக்க வேறு மாற்று கிடையாது என்றாலும் இடஒதுக்கீட்டை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். அவற்றில் ஒருகூறு கிரீமிலேயர் நடைமுறையை அனைத்துப் பிரிவினருக்கும் சமூகநீதி பாதிக்கப்படாத வகையில் ஆக்கப்பூர்வமாக பின்பற்றப்பட வேண்டும் என்பது.

தற்போதைய கிரீமிலேயர்

கிரீமிலேயர் முறையே ஒரு பாகுபாடானதாகவும் பார்க்கப் படுகிறது. அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. தனது வருமானத்தை அல்லது குடும்பத்தின் வருமானத்தை அரசுப் பணியில் உள்ளவர்கள் வெளிப்படையாக முழுமையாக காட்ட வேண்டிய கட்டாயமிருக்கிறது. ஆனால் அதைப் போல தனியார் துறையில் பணியாற்றும் நபர்களோ, சுயதொழில் நடத்துபவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற பிறரோ தங்களது வருமானத்தை முழுமையாகக் காட்டுவதற்கான வாய்ப்புகள் தற்போதைய நடைமுறையில் இல்லை.

வருவாய்த் துறையினரால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் ஒன்றுதான் அவரவர் வருமானத்தை நிர்ணயிக்கும் ஒரே காரணியாக இருக்கிறது. நடைமுறையில் வருமான சான்றிதழ் வழங்க என்னென்ன வழியில் எவ்வளவு வருமானம் தனிநபரால் அல்லது குடும்பத்தால் ஈட்டப்படுகிறது என்ற கூர்மையான நேர்மையான ஆய்வு நடத்தப்படுவதில்லை.

மாறாக வருமான சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரரால் தனது வருமானம் இன்னது என்று அளிக்கப்படும் தகவலைப் பொறுத்து அந்த வருமானத்துக்கோ அல்லது சற்று கூட்டியோ பெரும்பான்மையான வருமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 

குறைந்தபட்சம் வருமானச் சான்று கோருபவர் ஏதேனும் வகையில் வரி செலுத்துபவரா என்பது கூட ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. வருவாய்த் துறைக்கும் வருமான வரித் துறைக்கும் இடையே ஒரு மெல்லிய ஒருங்கிணைப்பு இருந்தாலே இவற்றில் பெரும்பான்மையைச் சரிசெய்துவிட முடியும். ஆனாலும் அரசு நிர்வாகத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள அலட்சியப்போக்கும் புரையொடிப் போயிருக்கும் லஞ்சநோயும் சரியான நேர்மையான வருமான சான்றிதழ் வழங்கப்படுவதில் பெருந்தடைக் கற்களாக இருக்கின்றன.

ஒருநபரை கிரீமிலேயராக வகைப்படுத்துவதில் இவ்வாறு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் இவையெல்லாவற்றுக்கும் மேலாக கிரீமி லேயர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதும், கிரீமிலேயர் வருமானதாரர்களை முன்னேறியவர்களாகக் கருதி பொதுப்பிரிவில் போட்டியிடச் செய்வது என்பதும் மிகப்பெரும் சமூக அநீதி.

பிற்படுத்தப்பட்டோருக்கான பாராளுமன்றக் குழு, “கிரீமி லேயர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒருபுறம் இதர பிற்பட்டோரை நீக்கிக் கொண்டே போகிறீர்கள், இன்னொரு புறத்தில் மத்திய அரசுப் பணிகளில் 16 சதவீதம் பேர் கூட இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியவில்லைஎன்று தெரிவிக்கிறது.


ஆக்கப்பூர்வமான சமூகநீதிக்கான கிரீமிலேயர்

தற்போது நடைமுறையில் உள்ளது போல கிரீமிலேயரில் வருபவரை சமூகநீதிக்குப் புறம்பாக முற்பட்டவர்களாகவோ முன்னேறியவர்களாகவோ கருதி இடஒதுக்கீட்டு முறையிலிருந்து வெளியேற்றுதல் அறவே கூடாது. மாறாக கிரீமி லேயராக உள்ள ஒருவருக்கு அவரது பிரிவில் பின்னுரிமையும் அல்லாதோருக்கு முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். 

அதுவும் தற்போது உள்ளவாறு இதர பிற்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) மட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் (எஸ்சி,எஸ்டி) கூட அது பொருந்துவதாக அறிவியல்பூர்வமாக வடிவமைக்கப்பட வேண்டும். இதுவே ஆக்கப்பூர்வமான சமூகநீதி.

எந்த அளவிற்கு இடஒதுக்கீட்டிலிருந்து கணிசமானவர்களை வெளியேற்றலாம் என்பதையே நோக்காகக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் அரசு எஸ்சி எஸ்டிக்கும் கிரீமிலேயரை அமல்படுத்தினால் அது விபரீதமாகத்தான் முடியும் என்கிற சந்தேகம் நியாமானதுதான்.

ஆனால் கிரீமிலேயர் என்பதை தற்போது உள்ளதுபோல இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றும் நடைமுறையாகப் பின்பற்றாமல் ஒவ்வொரு பிரிவிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பொருட்படுத்தி, உள்ளார்ந்த, அடிமட்டத்திலிருந்து மேல்நோக்கிய, முறையான முன்னேற்றத்தைக் கைக்கொள்வதற்கான ஒரு சீரிய சாதனமாக பின்பற்ற வேண்டும் என்பதே நாம் கருதும் ஆக்கப்பூர்வமான சமூகநீதி.

இதுபோன்று அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் பொருளாதார பின்புலத்தையும் சமூக வரலாற்றையும் ஒருசேர சிந்தித்து அடித்தள முன்னேற்றம் ஏற்படுவற்காக ஓரளவு முன்னேறியவர்,  முன்னேற்றத்தின் சுவடே படாதவருக்காக ஒதுங்கி நின்று வழிவிட்டு பின்னர் செல்வது அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்திட ஒரு வாய்ப்பாக அமையும்.

இடஒதுக்கீட்டை எப்போது விழுங்கி செறிக்கலாம் எனக் காத்துக்கிடக்கும் மத்திய அரசும், அந்தந்த இடஒதுக்கீட்டுப் பிரிவில் ஆதாயத்தை அனுபவித்தவர்கள் தன்னுடைய அடுத்தடுத்த சந்ததிக்கு மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்க வேண்டுமென்று இருக்கிப் பிடிப்பதும்,  சாதிய முன்னேற்றத்திற்கான அமைப்பு ரீதியிலான அரசியலும் கூட பெரும்பாலும் இடஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் கைகளிலேயே இருப்பதும் இத்தகைய ஒரு கிரீமிலேயர் முறையைப் பின்பற்றுவதில் தொடர்ந்து பின்னடைவு இருந்து வருவதற்கான காரணங்களாக உள்ளன.

இடஒதுக்கீட்டு விழுக்காட்டின்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிரிவிலும் கிரீமிலேயர் அல்லாதோருக்கு முழுக்க முழுக்க கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கியதுபோக மீதமுள்ள இடங்கள் அவ்வப்பிரிவில் உள்ள கிரீமிலேயரில் வருபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஒருவேளை குறிப்பிட்ட பிரிவில் ஆளில்லாமல் போனால்கூட அவ்விடங்களைப் பொதுப்பிரிவிற்கு மாற்றாமல் பின்னாளில் நிரப்பும்படி இருத்தி வைக்கும் நடைமுறையை முறையாகக் கையாள வேண்டும்.

பொருளாதாரத்தில் வளர்ந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினரே இடஒதுக்கீட்டை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறார்கள். நல்ல வருவாய் ஈட்டும் அரசுப் பணியிலோ அல்லது தனியார் பணியிலோ பணிபுரியும் பெற்றோர் அவர்களது குழந்தைகளுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளையும் மேம்பட்ட வாழ்க்கையையும் உறுதி செய்கிறார்கள். அவ்வாறு உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வரும் ஒரு நபரையும் அத்தகைய எந்தவிதமான அடிப்படை வசதியும் எந்தவிதத்திலும் பார்த்திராத குடும்பத்திலிருந்து வரும் ஒரு நபரையும் ஒரே தராசில் எடைபோடுவது எப்படி சமூக நீதியாகும்? அதை எவ்வாறு சமவாய்ப்பாகக் கருத முடியும்?

இடஒதுக்கீட்டினால் பயன்பெற்ற குடும்பங்களின் வாரிசுகளே அதிக அளவில் மீண்டும் மீண்டும் பயன்பெறுவதால் ஒருமுறையும் இடஒதுக்கீட்டை அனுபவிக்காத ஒரு பிரிவு எந்தவித முன்னேற்றமும் இன்றி சமூகத்தின் அடித்தளத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. இது அனைத்துப் பிரிவிற்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் இத்தகைய குறைகளைக் குறைக்க பொருளாதார ரீதியாகவும் இன ரீதியாகவும் பல்வேறு பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு போன்ற முறைகளைக் கையாண்டாலும் கூட இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பினதங்கியோருக்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொடுக்கப்படும் உள்ளார்ந்த முன்னுரிமையே அனைத்திலும் வலிமையானதும் பாதுகாப்பானதும் ஆகும்.

வருமான உச்ச வரம்பு

கிரீமி லேயருக்குரிய உச்ச வரம்பான ஆண்டு வருமானம் ரூபாய் ஆறு லட்சத்திலிருந்து தற்போது எட்டு லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் உச்சவரம்பை நிர்ணயிக்க பரிந்துரை செய்த நீதியரசர் ஈஸ்வரையா தலைமையிலான தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 10.50 லட்சம் ரூபாயாக முதலிலும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பாராளுமன்றக் குழுவின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் 15 லட்சம் ரூபாயாக இறுதியிலும் பரிந்துரைத்தது. 

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான பாராளுமன்றக் குழு 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்க வலியுறுத்தியது. ஆனால் எவற்றையும் பொருட்படுத்தாத மத்திய அரசு 8 லட்சம் ரூபாயாக உச்சவரம்பை நிர்ணயம் செய்துள்ளது. ஆக இடஒதுக்கீட்டின் மீதும் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் தற்போதைய மத்திய அரசுக்கு உள்ள அக்கறை எவ்வளவு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

ஒருவேளை சமூகநீதி காக்கும் மெய்யான கிரீமிலேயர் முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்துமானால் வருமான உச்சவரம்பு வருடாவருடம் மாற்றத்தக்கதாகவும், ஒரு தலைமுறை கிரீமிலேயரில் வந்தது என்பதற்காக அவரது குழந்தைகளும் கிரீமிலேயர் வரம்பிற்குள்தான் வரவேண்டும் என்றவாறில்லாமல் அவ்வப்போதைய வருமானமே ஒருவரை கிரீமிலேயரில் வைப்பதற்கான உண்மை அளவுகொலாக இருக்க வேண்டும். அத்துடன் கிரீமிலேயருக்கான வருமான உச்ச வரம்பை வரையறுக்கும் பொறுப்பு உரிய ஆணையங்களிடமே அமையப் பெற்றதாகவும் இருக்க வேண்டும்.

சராசரி நிலையில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஆண்டு வருமானத்தைப் போல் ஒன்றரை மடங்கு, கடந்த நிதியாண்டில் தனிநபர் வருமானவரி தாக்கல் செய்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஆண்டு வருமானத்தின் சராசரி போன்ற ஒன்றையோ பிறவற்றையோ வருமான உச்ச வரம்பை நிர்ணயிப்பதற்கான அளவுகோலாகக் கொள்ளலாம்.

மேலும் தற்போது மத்திய அரசு வருமான உச்சவரம்பை கஞ்சத்தனமாக குறைத்துக் காட்டுவதைப் போல எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து வருமான உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம். அது எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இடஒதுக்கீட்டின் வழியே முன்னுரிமையின் அடிப்படையில் அனைத்துப் பிரிவிலும் விளிம்புநிலையில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும், இடஒதுக்கீட்டிற்கான தகுதி இருந்தும் அதன் பயன் தலைமுறை தலைமுறையாக எட்டாக் கனியாகவே உள்ளவர்களும், ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக உள்ளவர்களும் பயன்பெறுவர்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்க்க வரிசையில் நிற்கிறோம். அங்கு நம்மை விட மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர் வருவாரானால் அவருக்கு வரிசையைத் தாண்டி முன்னுரிமை தருகிறோம் இல்லையா?  கிரீமிலேயர் வழியே பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பது என்பதும் அதைப்போலத்தான்.

-மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com



அரசியல் முடிவற்றது




ஒரு ஜனநாயக நாட்டில் எது பெரும்பாண்மையோ அதுதானே நடந்தேற வேண்டும்.

செய்தித்தாள், தொலைக்காட்சி, முகநூல், வாட்ஸப் என்று எங்கு திரும்பினாலும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நடிகர்கள், விமர்சகர்கள் முதல் தேநீர்க்கடை பேச்சாளர்கள் வரை எல்லோரும் பெரும்பாண்மையாக நீட் தேர்வை ஏற்காமல் எதிர்த்த போதும், பெரும்பாண்மைக்கு மதிப்பளிக்காமல் பெரும்பாண்மையை மிதிக்கும் போக்கில் ஒரு ‘அரசு செயல்படுமானால் அதை எப்படி ‘பெரும்பாண்மையால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாக நாம் எடுத்துக்கொள்ள முடியும்?

பெரும்பாண்மையின் உணர்வு புரியாமலா ஒரு அரசு செயல்படுகிறது? அவ்வாறு செயல்படத்தான் முடியுமா?

எல்லோரும் தட்டினால் அதுவும் எல்லோரும் ஒரே நேரத்தில் தட்டினால் அதிலும் எல்லோரும் ஒரே குரலில் அதட்டினால் கூட திறவாத கதவுடைய காதுகேட்காத அரசின் காதுகளில் எந்த எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுவது?

ஒருவேளை இந்தியப் பெரும்பாண்மையை உற்றுநோக்கும்போது தமிழகம் சிறுபாண்மைதானே என்ற பா(போ)ர்வையில் நீட் தேர்வைத் தமிழகத்திற்கு கட்டாயமாக்குமானால், இந்திய நாடு வெறுமனே ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்லவே! அது ஒரு ஜனநாயகக் குடியரசாயிற்றே!! ஒரு குடியரசு அனைத்து மக்களுக்கானதுமாக, அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமாகத்தானே இருக்க வேண்டும். அவ்வாறு குடிகளுக்கான உரிமைகளை மதிக்காமல் போனால் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சொல்லப்பட்ட “இறையாண்மைமிக்க, சமூகத்துவ, சமயசார்பற்ற, ஜனநாயக குடியரசு என்பது பொருளற்றதாகிவிடாதா?

ஆனால் அவ்வாறு, ‘நாம், இந்திய மக்கள்…….. எனத் துவங்கும் அரசியலமைப்பின் முகப்புரையைப் பொருளற்றதுதாக்கிவிடுவதற்கான வேலைப்பாடுகள்தான் இன்று அதிவேகமாக நடைபெற்று வருகின்றன என்பதுதான் நம் சமகாலத்திய சாபக்கேடு.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 1976-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது திருத்தத்தின் அடிப்படையில் பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை வலியுறுத்தும்படியாக ‘சமூகத்துவ(சோஷலிஸ்டிக்) மற்றும் ‘சமயசார்பற்ற(செக்யூலரிஸ்டிக்) ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
இந்த இரண்டு வார்த்தைகளுமே தற்போது ஆளும் மத்திய அரசுக்கு உவப்பாக இல்லை. 

இவ்விரண்டு சொற்களையும் நீக்கிவிடுவதற்கான முயற்சிகள் இவ்வாட்சியின் தொடக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்டபோது கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பியது. வார்த்தைகளை நீக்கவில்லை, ஆனால் அவற்றை நீக்காமலேயே அவற்றை நீக்கிய பொருளில் தமது செயற்பாடுகளை வெகுகனகச்சிதமான முறையில் கட்டமைத்துக்கொள்கிறது. தமிழகத்தின் சமீபத்திய உதாரணமான உதயசந்திரனைப்போல.

ஆனாலும் மத்திய அரசு செயல்படுத்திவரும் ஒவ்வொரு வெகுமக்கள் விரோத நடவடிக்கையையும் அத்தகைய நடவடிக்கைகள் மூலமாகவே தான் ஒரு வெகுமக்கள் நண்பனைப் போன்ற விளம்பரத்தையும் அது செய்துகொள்கிறது.

ஒவ்வொரு நாளையும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருத்திவைக்க அரசே திட்டமிட்டு செயலாற்றிவருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படும்படியாக அரசின் செயல்கள் அமைந்துள்ளன. இன்றைய பொழுதின் பிரச்சினை நீட் தேர்வு குறித்தது என்றால் அது என்றைய பொழுதையும் பிரச்சினையற்றதாக வைக்கவே இல்லை. 

குறிப்பாக மாநில உரிமைகளை துச்சமென மிதித்து கூட்டாட்சித் தத்துவத்தை ஊறுகாய்க்கும் மதிக்காமல் சட்டங்களைத் தீட்டுவதும் திட்டங்களைச் செயல்படுத்துவதும் ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அதையே ‘ஒரே இந்தியா, ஒரே தேசம், ஒரே சட்டம் என்று கோஷமிட்டவாறு அவற்றையே விளம்பரமாக செய்தும் வருகிறது. இவற்றை எதிர்த்து கருத்துரைப்பவர்களை 'இந்தியாவிற்கு எதிரானவர்', 'தேசவிரோதி' என்பதுபோல சித்தரிப்பதும், அவற்றுக்கு பலநேரங்களில் நீதிமன்றங்களையும் திடமாக துணைக்கு அழைத்துக் கொள்வதும்தான் இன்றைய ஆளும் அரசின் ராஜதந்திரம்.

வளர்ச்சித் திட்டம் என்கிற போர்வையில் தமிழ்நாட்டின்மீது மட்டும் விதவிதமான மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவற்றை எதிர்த்துப் போராடுபவர்களையும், கருத்து கூறுபவர்களையும் காட்டமாக ஒடுக்குவதும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதும் மற்றெப்போதும் இல்லாத அளவில் தற்போது அதிகரித்திருக்கிறது.

இன்றைய சூழலில் அதிகரித்துவரும் வெகுமக்கள் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களைக் காட்டிலும் வெளியே இருந்து பிரச்சினை குறித்து கருத்து கூறுபவர்கள் அதிகம். 

தவறில்லை. ஆனால் அவ்வாறு பகிரப்படும் விவாதிக்கப்படும் கருத்துகள் உரிய பொதுநியாயத்தோடு ஒட்டிய சிந்தனையுடன் எங்கேனும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும்.

அந்தக் கருத்தை பொதுநியாயத்தை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள் எவையெவை எனவும், அக்கட்சிகளில் எவையெவை அழுத்தத்தோடு நியாயத்துக்காக வெகுமக்கள் நலன்கருதி போராடுகின்றன எனவும், அவற்றிலும் வெறுமனே அடையாளத்துக்காக போராடுபவை எவை, அடையாளத்தைத் தாண்டி ஆழமான புரிதலுடன் ஒடுக்கப்பட்டோர் சிறுபாண்மையினர் போன்றோர் நலனை உள்ளடக்கி வெகுமக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் முன்னெடுப்பவை எவை என்று சல்லடைபோல சலித்தெடுத்து அரசியல் கட்சிகளின் உண்மை முகங்களை அடையாளம் காண வேண்டும்.

அல்லாமல் வெறுமனே கூடி பேசி அரிப்பைத் தணித்துக் கொண்டு விடைபெற்றுவிடுவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஏனெனில் நமது நாட்டைப் பொருத்தவரை இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் சர்வரோக நிவாரணி வாக்கு ஒன்றுதான்.

ஆனால் அத்தகைய வாக்கை செலுத்துவதில் நம்மவர்கள் காண்பிக்கும் அக்கறை இருக்கிதே, அது மிகவும் அலட்சியப் போக்குடன்தான் இன்றளவிலும் பெரும்பாண்மையாக இருந்து வருகிறது.

‘என்னுடைய ஒரு வாக்கினால் என்ன மாற்றம் விளைந்துவிடப் போகிறது? என்ற மாதிரியான விரக்தியும், ‘நான் அளித்த வாக்கு வீணாகிவிட்டதென்றால் என்ன செய்வது? அதனால்தான் ஜெயிக்கிற நபருக்குப் பார்த்து வாக்களிக்கிறேன் என்ற மாதிரியான அசட்டுத்தனமும், ‘எங்கப்பா அந்த சின்னத்துக்குத்தான் காலாகாலமாக ஓட்டுப் போட்டார்; அதனால் நானும் அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன். ஏனென்றால் நாங்கள் அந்தக் கட்சி. அல்லது, ‘எங்கப்பா / எனது கணவர் இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடச் சொன்னார். அதனால் நான் இந்தச் சின்னத்துக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்ற மாதிரியான அடிமைத்தனமும் வாக்களிப்பதில் கோலோச்சுகிற அளவிற்கு அவரவரின் சொந்தமான அறிவு கோலோச்சுவதில்லை. 

இவை எல்லாவற்றையும் விட ‘இவர் என்னுடைய சாதி / மதம் என்ற மாதிரியான அடிப்படைவாதமும், ‘கோட்டர் கோழிபிரியாணி பணம் இலவச தேர்தல் வாக்குறுதிகள் போன்றவற்றின் ஆசையால் வாக்களிக்கும் தற்காலிக சுயலாபவேட்கைவாதமும் மிகவும் வலிமையாக வாக்களிப்பதில் பங்காற்றுகின்றன.

இத்தனை காலமாக அவர்கள் பட்ட அவத்தைகளுக்கு யார்யாரெல்லாம் காரணம் என்ற புரிதலும் அவர்களை விலக்கி மாற்று சிந்தனையுடன் உள்ள சரியான நபர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பதையும் அவர்கள் டீக்கடை முன்பும் இன்னபிற சந்திப்புகளிலும் இவ்வளவு காலமாக விவாதித்த பேச்சுக்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். 

சரியான மாற்றரசியலை சுயவிருப்பத்தோடும் தெளிவோடும் அர்த்தபூர்வமான புரிதலோடும் சுயமாக தேர்வு செய்யும்படியாக அவர்களது பேச்சுகள் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டும்.

அன்றன்று அரங்கேறும் செய்திசார்பாக பேசுவதும் அதிலுள்ள நியாய அநியாயங்கள் தொடர்பாக வாத பிரதிவாதங்களில் பங்கேற்று அன்றன்றைய கோபங்களைத் தற்காலிகமாகத் தணித்துக்கொள்வதில் முடிந்துவிடுவதில்லை நமக்கான அரசியல். அரசியல் முடிவற்றது.

-மாணிக்க முனிராஜ்
manickamuniraj@gmail.com
கேள்விகளை அடக்கும் கேள்விகள்








அத கேக்க நீ யாரு?
உனக்கு இந்த கேள்விய கேக்க என்ன தகுதி இருக்கு?
மொதல்ல உன்னயும் உன்ன சுத்தியிருக்குறவங்களயும் திருத்து. அப்புறம் எங்கள பத்தி சொல்லு.
நீ மட்டும் யோக்கியமா?
த்தோ வந்த்டாருப்பா காந்தி… நம்மள திருத்துறதுக்கு…
இன்னும் இவை போன்ற பல வியாக்கியானங்களை நாம் அன்றாடம் கேட்கிறோம்.  

ஒரு குறையைச் சுட்டி காட்டி கேள்வி கேட்க முன்வருபவர் மீது அன்றாடம் அள்ளி வீசப்படும் சேறுகள்தாம் இவை. 

ஒருபுறம் கேள்வி கேட்பவரிடம்  அவரால் கேட்கப்படும் கேள்வி சார்ந்து  அவரிடம் சமூகம் எதிர்நோக்கும் ஒழுக்க எதிர்பார்ப்பில் நியாயம் இருந்தாலும், மறுபுறம் தன்னுடைய தவறை எவரும் அடையாளப்படுத்திவிடாதபடி தற்காத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளே இவற்றில் பெரும்பான்மை.

இந்த சமூகம் தனக்கென சில விழுமியங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றை பரிபூரணமாகப் பின்பற்ற சமூகப் பிராணியான மனிதனை தொடர்ந்து அது வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.
 
எது சரி எது தவறு என்பதை இலக்கியங்களும் நமது சான்றோர்களும் முன்னோர்களும் பலவாறு கூறியிருப்பதை ஒருவாறு உள்வாங்கியும் சமூகம் நிகழ்கால படிப்பினைகளோடு பின்னிப்பிணைந்து விழுமியங்களை கட்டமைக்கிறது. 

சமூகத்தின் விழுமியங்களை கட்டமைப்பது சமூகமேதான்.

சமூகத்தின் விழுமியங்கள் சார்ந்த புரிதல் இல்லாத அல்லது எட்டாத மனிதர்களைக் காட்டிலும் அத்தகைய புரிதல் உள்ளவரிடம் அவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.  அதனால்தான் இந்த சமூகம் ஆசிரியர்களிடம் அளவுகடந்த விழுமியங்களை எதிர்பார்க்கிறது.

ஆனால் வரலாற்று ரீதியாகக் கொண்டாடப்படும் புனிதர்களில்கூட அப்பழுக்கற்ற தன்மை என்பது காலங்காலமாக வளர்ந்து வந்த ஒன்றேயல்லாமல் எந்தவொரு மனிதனுக்கும் அது உடன்பிறப்பல்ல.

பொதுவாக சமூகம் விரும்பும்படியான விழுமியங்களின் பரிபூரணத்தை அடைய ஒவ்வொரு நாளும் தன்னாலானவரை முயற்சிப்பது ஒன்றே இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டியது.

அவ்வாறான விழுமியங்களின் முழுமையை நோக்கிய பாதையில் முட்டுக்கட்டைகளாக இருப்பவைதாம் மேற்பகிர்ந்த கேள்விகள்.
கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்றவாறான கேள்விகள். அதாவது கேள்விகளை அடக்கும் கேள்விகள்.

எல்லாவற்றிலும் முழுமைத்துவத்தை அடைந்த பிறகே ஒரு மனிதன் கேள்வி கேட்கத் தகுதியானவனாகிறான் என்ற தகுதிப்பாட்டை கேள்வி கேட்பதற்கான தகுதியாக வைத்துக்கொண்டால் எந்தவொரு மனிதனும் கேள்வியே கேட்கமுடியாது. 

ஏனென்றால் முழுமைத்துவம் என்பது ஏதோவொரு பாதையின் முடிவல்ல. அது ஒரு முடிவற்ற பாதை.

கேள்விகள் புதுமைகளின் விதைகள்; நாகரிக மறுமலர்ச்சியின் நுழைவாயில்கள்; சமூகப்புரட்சிகளின் தோற்றுவாய்கள்; அனைத்துவகை அறிவியல்களின் அடிப்படைகள்; வர்க்கப் புரிதல்களின் வெளிச்சக் கீற்றுகள்; அடிமனதின் அச்சம் போக்கிகள்; ஆறாம் மனித அறிவின் அடையாளங்கள்; நாளைய உலகின் நம்பிக்கைகள்.
கேள்விகள்தான் இந்த சமூகத்தின் களை கொத்திகள்.

-மாணிக்க முனிராஜ்
ஆசிரியர்
manickamuniraj@gmail.com


அறுபடாத தொடர் சங்கிலி

மாற்றத்தின் மணற்கேணியில் தொட்டனைத்து ஊறிப் பரவிய உலகின் பல படைப்புகளை உளமாற நுகர்வது  வாசிப்பு வாசிப்பின் பகிர்மாணத்தில் உழைப்பின் துளிகளில்...